Publish Date: Fri, 14 Aug 2020 (11:38 IST)
Updated Date: Fri, 14 Aug 2020 (11:41 IST)
திமுகவிலிருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்ட நிலையில் மேலும் பல திமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுகவிலிருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியும் சாராத எம்,எல்,ஏவாக இருக்க போவதாக அறிவித்துள்ள கு.க.செல்வம் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி அளித்ததில் இருந்து திமுக மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாக பாஜக பிரமுகர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல திமுகவினர் பாஜகவில் இணைவதற்காக பேசி வருவதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கட்சி மூத்த உறுப்பினர்களுக்கு தக்க மரியாதை வழங்காத பட்சத்தில் திமுக கூடாரத்திலிருந்து பலர் வெளியேறக்கூடும் என பிற கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.