Publish Date: Fri, 14 Aug 2020 (10:07 IST)
Updated Date: Fri, 14 Aug 2020 (10:19 IST)
தமிழகத்தில் பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 25 ஆம் தேதி பனிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டது. அதன் பின்னர் மே மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் மீண்டும் போக்குவரத்து இரு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என போக்குவரத்து துறை ஊழியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளது. இது சம்மந்தமாக சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ‘கரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நீண்ட நாட்களாக பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே, அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் இயக்கலாம் என்ற தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழகத்தில் உடனடியாக பேருந்து சேவையை தொடங்கக் கோரியும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள புதிய அரசாணையை திரும்ப பெறக் கோரியும் வரும் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளது.