தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்றும், "மாடுகள் எல்லாம் வாக்குரிமை கேட்கிறதா?" என்றும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணாமலை பேசியபோது, "ஒரு வாக்காளர் பல விஷயத்தை பார்த்துதான் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கிறார். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்கிறார். மாடுகள் எல்லாம் வாக்குரிமை கேட்கிறதா என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இன்னொரு அரசியல் கட்சித் தலைவர் மரம் ஏறிக் கொண்டிருக்கிறார். இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். மாற்றம் வரவேண்டும் என்றால் நீங்கள் முதலில் சரியாக இருக்க வேண்டும்.
கண்மூடித்தனமாக எந்த கட்சித் தலைவரையும் எதிர்க்க வேண்டாம், ஆதரிக்கவும் வேண்டாம்" என்று கூறிய அண்ணாமலை, "வருவோர் போவோர் எல்லாம் தலைவராகி விடுகின்றனர். வெள்ளை சட்டை போட்டு, ரீல்ஸ் போட்டாலே தலைவராகி விடுகின்றனர். சும்மா இருந்தால் கூட ஒரு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர். அரசியலில் எந்தப் பதிவையும் இல்லாமல் போவது இயல்புதான்" என்றும் பேசினார்.