Publish Date: Sun, 03 Jan 2021 (12:01 IST)
Updated Date: Sun, 03 Jan 2021 (12:04 IST)
கன்னியாக்குமரியில் மதுபோதையில் காவலர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் கோணம் காடு பகுதியை சேர்ந்தவர் அருள் ஜாக்சன். காவலராக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருள் ஜாக்சன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படியாக சண்டை நீண்டு கொண்டிருந்த நிலையில் நேற்று இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர் தன்னிலை மறந்து வீட்டை கொளுத்திவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அருள் ஜாக்சனை போலீஸார் தேடி வரும் நிலையில், ஏற்கனவே அருள் ஜாக்சன் திருநெல்வேலி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது குடிபோதையில் தகராறு செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.