PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டின் கல்வி நிதியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி உள்ளதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
PM SHRI திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அந்த திட்டத்தில் இணைந்தால் முன்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தை ஏற்கவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ₹2152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையையும் அதன் மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்திற்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும், தங்கள் உரிமைக்காக போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலை செய்கின்றனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தும் திட்டத்தை இரக்கமில்லாமல் நடந்து கொண்டதில்லை என்றும், தமிழக மக்கள் மீது வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியின் முழு உருவம் பாஜக என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.