பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வர இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அப்போது வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 26-ஆம் தேதி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்யப் பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். மேலும், சிதம்பரத்திலிருந்து 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நேரலையில் உரையாற்றவும் அவர் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
தற்போது, இந்த திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அவரது தமிழக பயணம் அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் அவர் தமிழகம் வரும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.