Publish Date: Wed, 29 Nov 2017 (10:56 IST)
Updated Date: Wed, 29 Nov 2017 (15:44 IST)
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் இன்றுமுதல் உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்களை தேர்வு மூலம் பணியமர்த்தியபோது இரண்டு வருடங்களில் அரசு ஊழியர்களாக ஆக்கப்படுவீர்கள் என்று கூறியதால்தான் இந்த பணியில் சேர்ந்தோம். ஆனால் தற்போது ரூ.7200 சம்பளம் மட்டுமே கடைசி வரை வழங்க முடியும் என்றும், நர்ஸ்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்போவதாக அரசு மிரட்டியுள்ளதால் ஒருசிலர் மட்டுமே போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் நாங்கள் கடைசி வரை போராடுவோம். நர்ஸ் படித்த எங்களுடைய நிலைமையை பார்த்து, தயவுசெய்து இனிமேல் யாரும் நர்ஸ் வேலைக்கு படிக்க வேண்டாம். நர்ஸ்கள் என்றால் சேவை மனப்பான்மை உடையவர்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் நாங்கள் சாப்பிட்டோமா என்று கேட்ககூட நாதியில்லை' என்று கூறினார்.