Publish Date: Wed, 29 Nov 2017 (10:21 IST)
Updated Date: Wed, 29 Nov 2017 (15:43 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கிடையே பலத்தை போட்டி நிலவுகிறது.
இரு அணிகளும் இணைந்துவிட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியில் இருந்தவர்களுக்கு எடப்பாடி தரப்பு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை, மைத்ரேயன் எம்.பி மற்றும் ஓபிஎஸ் அணி ஐ.டி.பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர்.
அதன் பின் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும், நியமனம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே மோதம் எழுந்தது. அதன், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். முக்கியமாக, கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவைத்தலைவர் மதுசூதனனே இந்த முறையில் போட்டியிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது. ஆனால், அதற்கு எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விருப்ப மனு பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுப்பது என்பது முடிவானது.
அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டது. இதுவரை மொத்தம் 27 பேர் மனு அளித்துள்ளனர். இது ஓபிஎஸ் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் தன்னுடைய ஆதரவாளர்களில் ஒருவரை எடப்பாடி தேர்தெடுப்பாரா, அல்லது எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்து மதுசூதனனையே அறிவிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.