அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் தி.மு.க. அரசையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"துணை முதல்வர் உதயநிதிக்கு என்ன உழைப்பு இருக்கிறது? அந்த 'பால்டாயில் பாய்' நம்மை குறித்து இழிவாகப் பேசுகிறார்," என்று பழனிசாமி சாடினார். மேலும் டிஜிபி நியமனத்தில் தாமதம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய அவர், அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
தி.மு.க. ஆட்சியில் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக குறிப்பிட்ட பழனிசாமி, "சாமான்ய மக்களின் நிலையை உணராத 'திறமையற்ற பொம்மை முதல்வரே' தமிழகத்தை ஆள்கிறார்" என்று விமர்சித்தார்.
எமர்ஜென்சியில் தான் பட்ட துன்பத்தை கூறும் ஸ்டாலின், அதே எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸுடன் ஏன் இன்னும் கூட்டணி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க.வின் அழுத்தம் காரணமாகவே 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்திற்கு மத்திய அரசு ₹12,500 கோடி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி பயத்தில் பதறி பேசுவதாகவும் பழனிசாமி கூறினார்.