Publish Date: Wed, 09 Oct 2024 (17:32 IST)
Updated Date: Wed, 09 Oct 2024 (17:33 IST)
சாம்சங் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருக்கும் நிலையில் உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குனர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.
தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!