Publish Date: Sun, 27 Dec 2020 (14:45 IST)
Updated Date: Sun, 27 Dec 2020 (14:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை அதிமுக தொடங்கியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தல் பரப்புரையை தொடங்கும் பொதுக்கூட்டம் சென்னை ஒய்,எம்சிஏ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், அதை ஒப்புக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்றும் உறுதிப்பட தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தேர்தல் பணிகள் குறித்து பேசி முடிவில் தொண்டர்களிடம் “புறப்படுங்கள் உடன்பிறப்புகளே.. தேர்தல் களத்தில் வென்று வாருங்கள்” என பேசினார்.
பொதுவாக அதிமுக கூட்டங்களில் மக்கள் மற்றும் தொண்டர்களை ரத்தத்தின் ரத்தங்களே என அழைப்பதே வழக்கம். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இவ்வாறு அழைத்ததன் காரணமாக தொடர்ந்து அவ்வாறே அழைக்கப்பட்டு வருவதுபோல, திமுகவிற்கு உடன்பிறப்புகள் என்ற வார்த்தை அதிக உபயோகமானதாக உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் உடன்பிறப்புகளே என தவறுதலாக குறிப்பிட்டது வைரலாகியுள்ளது.