Publish Date: Sat, 02 Sep 2017 (13:32 IST)
Updated Date: Sat, 02 Sep 2017 (13:40 IST)
மாணவி அனிதா தற்கொலை குறித்து தமிழக முக்கிய அரசியல்வாதிகள் பலர் கருத்து கூறாமால் இருப்பது மக்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசவில்லை. சிலர் தாமதமாகவே பேச தொடங்கினர்.
முக்கியமாக நேற்று அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும், பாஜக அரசியல்வாதிகள் மயான அமைதி காத்தனர். இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா ஆகியோர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பையே தவிர்த்தார். ஹெச்.ராஜாவும், தமிழிசையும் தாமதமாகவே அனிதாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.
அதேபோல், எடப்பாடிக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ தொடங்கிய முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அனிதாவின் மரணத்தை பற்றி வாய் திறக்கவில்லை. அவரோடு இருக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இதுபற்றி பேசவில்லை. இத்தனைக்கும் இவர் முன்னாள் கல்வி அமைச்சராக இருந்தவர். அதோடு முதல்வரின் குரலாகவே செய்தியாளர்களிடம் வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.