Publish Date: Fri, 30 Jan 2026 (19:29 IST)
Updated Date: Fri, 30 Jan 2026 (19:32 IST)
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 3 முறை முதல்வராக இருந்தவர் ஓ,பன்னீர்செல்வம். ஆனால் கட்சி, ஆட்சி இரண்டும் எப்போது எடப்பாடி பழனிச்சாமி கைக்கு போனதோ அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மவுசு குறைந்துபோனது. ஒருகட்டத்தில் கட்சிக்கு துரோகம் இழைத்ததாக சொல்லி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்பின் எப்படியாவது மீண்டும் அதிமுகவில் சேர்ந்து விட வேண்டும் என பல முயற்சிகளை செய்தார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக தலைமை மூலமாகவும் தூது விட்டுப் பார்த்தார். ஆனால் இனிமேல் பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்ததால் அது நடக்கவில்லை.
தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியோடு இணைந்திருக்கிறது.. பாஜக தலைமை மூலமாகவும், டிடிவி தினகரன் மூலமாகவும் எப்படியாவது இந்த கூட்டணியில் இணைந்துவிட வேண்டும் என பல முயற்சிகளை செய்தார் பன்னீர்செல்வம்.. ஆனால் அதிமுக பொதுக்குழு முடிவெடுத்து நீக்கப்பட்டு விட்டார் ஓபிஎஸ்.. இனிமேல் அவரை கட்சியில் சேர்க்க முடியாது என சொல்லிவிட்டார் பழனிச்சாமி.
அதிமுகவில் அவரை சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. குக்கர் சின்னத்தில் அவரை போட்டியிட வைக்கலாம். இந்த கூட்டணியில் அவர் இருக்கட்டும் என பாஜக தரப்பும், டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிச்சாமிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பழனிச்சாமி என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை.
இந்த கூட்டணிக்குள் ஓபிஎஸ் வரக்கூடாது என பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டால் கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டிடுவார் எனத் தெரிகிறது.