தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சுதந்திரத் தன்மை கொண்டது என்றும், இதில் மொழியை திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு, தமிழக ஆளுங்கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதிலாக, தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்பியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியல்ல. உலக அளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை பிரபலப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சுதந்திரத் தன்மை கொண்டது; மொழியை திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன.
மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் வளர வேண்டும் என்றால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.