Publish Date: Mon, 02 Apr 2018 (12:43 IST)
Updated Date: Mon, 02 Apr 2018 (12:46 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதால் தான் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் பல்டி அடித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எம்.பி.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அந்நிலையில், அதிமுக எம்.பி.முத்துகருப்பன் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடக தேர்தல் காரணமாக பாஜக அரசியல் செய்கிறது. ஆனால், தண்ணீர் கொடுப்பதில் அரசியல் செய்வது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. எனது செல்போனை அணைத்து வைத்து விட்டேன். முதல்வர், துணை முதல்வர்கள் என்னை சமாதானம் செய்வார்கள். அதை நான் விரும்பவில்லை. அவர்களிடம் பிறகு பேசிக்கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார். மேலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கய நாயுடுவிடம் கொடுப்ப இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் தொலைப்பேசியில் ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், ராஜினாமா செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டதாக அவர் தற்போது பல்டி அடித்துள்ளார்.