Publish Date: Mon, 19 Mar 2018 (15:46 IST)
Updated Date: Mon, 19 Mar 2018 (20:56 IST)
ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்.பிக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்பதை காரணம் காட்டி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் செயல்படும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்து, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேச கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.
ஆனால், அதிகபட்ச எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றி பெறும். எனவே, மற்ற கட்சி எம்.பி.க்களின் ஆதரவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் முயன்று வருகின்றனர்.
அந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், அதிமுக தரப்பில் இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் கூறியுள்ள செய்தியில், அதிமுக எம்.பிக்களை சந்தித்து இருகரம் கூப்பி, பா.ஜ.க-விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டோம். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஒருங்கிணைந்து போராடலாம் என்றும் சொன்னோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர் எனக் கூறியுள்ளார்.
இதிலிருந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.