Publish Date: Thu, 25 Jun 2020 (12:39 IST)
Updated Date: Thu, 25 Jun 2020 (13:20 IST)
திமுக எம்.பி கனிமொழிக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு மீண்டும் தரப்பட்டுள்ளது.
திமுக கட்சி உறுப்பினரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து வருகிறார். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் இறப்புக்கு காரணமான காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியை சந்தித்து எம்.பி கனிமொழி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு நியமிக்கப்பட்டிருந்த காவலர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது கனிமொழி நடவடிக்கை எடுக்க மனு அளித்ததன் விளைவாகவே போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கனிமொழி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், கனிமொழியின் வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.