Publish Date: Thu, 25 Jun 2020 (07:43 IST)
Updated Date: Thu, 25 Jun 2020 (07:53 IST)
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தற்போது கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு குடும்ப அட்டைகள் மூலமாக 1000ரூ வழங்கப்படுவது போல மதுரை மக்களுக்கும் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக ‘மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் நோய்த்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு சென்னையைப் போல ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களின் சிரமங்களைக் குறைக்கச் சென்னையில் வழங்கியது போல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கவும், அதனைச் செயல்படுத்தும் விதமாக வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.’ எனக் கூறியுள்ளார்.