Publish Date: Sat, 02 Mar 2024 (15:36 IST)
Updated Date: Sat, 02 Mar 2024 (15:42 IST)
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தை முன்னிட்டு ஜாம் நகர் விமான நிலையம் 10 நாட்களுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்,எங்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சண்ட்டி மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை திருமணத்திற்கு முந்தைய விழாக்களை தொடர்ந்து வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமண நடைபெறவுள்ளது.
இதில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. அதன்படி, பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்கள் வரவேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. வழக்கமாக 6 சிறிய விமானங்கள் மட்டுமே கையாளும் திறனுள்ள இந்த விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 140 விமானங்கள் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் எம்பி., தெரிவித்துள்ளதாவது:
'' மோடி அரசின் மெகா "மொய்"
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள்.''என்று தெரிவித்துள்ளார்.