Publish Date: Sat, 02 Mar 2024 (14:37 IST)
Updated Date: Sat, 02 Mar 2024 (14:56 IST)
மக்களவைத் தேர்தலில் திமுக தேர்தல் குழுவிடம் ஒரு தொகுதி கேட்டுள்ளதாகவும், கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்துள்ளோம் என்றும் கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றியில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நானும் பங்காற்றியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் ஒலிப்பது போல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்தார். ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்லவதாக திமுக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாக வேல்முருகன் தெரிவித்தார்.