Publish Date: Wed, 21 Oct 2020 (12:38 IST)
Updated Date: Wed, 21 Oct 2020 (12:40 IST)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாததால் நடப்பு கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் ஆளுனரை சந்தித்து பேசி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்!” என்று கூறியுள்ளார்.
மேலும் “கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.