Publish Date: Wed, 07 Mar 2018 (10:30 IST)
Updated Date: Wed, 07 Mar 2018 (10:33 IST)
பெரியார் சிலையை உடைப்போம் என கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 15 பேரின் பூணூலை சிலர் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணியில் பகுதியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிலரை இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவர்களின் பூணூலை அறுத்து எறிந்து விட்டு ‘பெரியார் வாழ்க’ என கோஷமிட்டு விட்டி அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எச்.ராஜாவின் செயலை விட அருவருப்பான செயல் இது. அவர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெரியாரின் பாதையில் செல்கிறோம் என்பவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். நம் இலக்கு ஹெச்.ராஜா மட்டுமே. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.