Publish Date: Thu, 09 Jan 2020 (11:27 IST)
Updated Date: Thu, 09 Jan 2020 (11:32 IST)
தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து இடம்பெற்றுள்ள வசனங்கள் சரியானவைதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இன்று உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தில் சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”பணம் இருந்த ஜெயில்ல இருந்தே ஷாப்பிங் போறாங்க” என்று கூறுவதாக வசனம் உள்ளது. இது சசிகலா சிறையிலிருந்து வெளியே ஷாப்பிங் போன விவகாரத்தை பகடி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ”சசிகலா குறித்து தர்பார் படத்தில் வைக்கப்பட்டுள்ள கருத்து சரியானதுதான்” என கூறியுள்ளார்.
இதே ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய திரைப்படமான சர்க்காரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வசனங்கள் மற்றும் அரசின் இலவச பொருட்களை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றதற்காக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே அமைச்சர் ஜெயக்குமார் இன்று முருகதாஸின் படத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.