Publish Date: Mon, 29 Apr 2019 (18:24 IST)
Updated Date: Mon, 29 Apr 2019 (18:27 IST)
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீரென போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில், பயணிகளுக்கு பேருதவியாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் டிராபிக் பிரச்சனை காரணமாக சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலில் அரை மணி நேரத்தில் சொகுசாக சென்றுவிடலாம்
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களில் எட்டு பேர், நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் சங்கம் ஆரம்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 8 பேர் சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் செய்ததால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சற்றுமுன் மெட்ரோ ரயில் ஓட்டுனர்களும் களத்தில் இறங்கியுள்ளதால் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக முடங்கியது. இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் கடும் அவதியில் உள்ளனர்.
பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவில் போராட்டம் செய்யும் ஊழியர்களிடம் மெட்ரோ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.