Publish Date: Thu, 29 Aug 2019 (09:12 IST)
Updated Date: Thu, 29 Aug 2019 (09:13 IST)
தென்காசி மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான தனுஷ்குமாரின் சித்தப்பாவான கருப்பையா மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் தேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. நியாய விலைக் கடை ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார். ஓய்வுக்குப் பிறகு அந்த பகுதியில் ஊர்தலைவராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் தென்காசி மக்களவை எம்,பி. திமுக எம்.பி.யின் சித்தப்பா என்பதால் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் தனது வயலை மேற்பார்வையிட சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரமாகியும் அவரைக் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் பதற்றமடைந்துள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு வயலுக்கு அருகில் சடலம் ஒன்று கிடப்பதாக சொல்லியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது கருப்பையா சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
கருப்பையா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரில் நடந்த திருவிழா ஒன்றில் நடந்த பிரச்சனையில் சிலரிடம் சண்டையிட அவர்கள் முன்பகைக் காரணமாக செய்தார்களா ? இல்லை வேறு சில அரசியல் காரணங்களுக்கு நடத்தப்பட்ட கொலையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.