Publish Date: Thu, 22 Oct 2020 (15:56 IST)
Updated Date: Thu, 22 Oct 2020 (15:58 IST)
கோவையில் பைனான்ஸ் தொழில் செய்துவந்த சௌந்தர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் வாகனங்களின் பெயரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் மைக்கேல் என்பவர் ஆட்டோ ஆவணங்களைக் கொடுத்து 40,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியாக 10000 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்துவிட்டு சென்ற பிறகு இளங்கோவனின் தாயார் அதில் 1000 ரூபாய் கம்மியாக உள்ளதாக சொல்ல இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதையடுத்து மைக்கேல் தனது நண்பர்களான திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோருடன் சென்று இளங்கோவனிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற ராகினி இளங்கோவனை கட்டையால் தாக்கியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற சௌந்தர் என்ற இளங்கோவனின் நண்பரை மைக்கேல் கத்தியால் குத்த பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சௌந்தரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் மைக்கல்(24), ராகிணி (32), வெண்பா (23) ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.