இரு அணியும் இணைந்து 4 மாதம் ஆச்சு ; ஆனால் மனங்கள்? - போட்டுடைத்த மைத்ரேயன்
Publish Date: Tue, 21 Nov 2017 (10:17 IST)
Updated Date: Tue, 21 Nov 2017 (11:00 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதை அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றினைந்து விட்டாலும், ஓ.பி.எஸ் தரப்பு இன்னும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. காரணம், துணை முதல்வர் பதவியில் இருந்தாலும், ஓ.பி.எஸ்-ஸிற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
அனைத்து இடங்களிலும் எடப்பாடியே முன்னிறுத்தப்படுகிறார். முக்கிய ஆலோசனகள் அனைத்தும், எடப்பாடி தலைமையில் ஓ.பி.எஸ் இல்லாமலேயே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் நடந்து வருகிறது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டுள்ளார்.
இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்