Publish Date: Sat, 18 Nov 2017 (13:42 IST)
Updated Date: Sat, 18 Nov 2017 (13:44 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு நடத்திய சோதனை அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் மொத்தம் 10 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. முடிவில், 2 லேப்டாப், பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் தினகரனின் ஆதரவாளரும், கர்நாடக அதிமுக நிர்வாகியுமான புகழேந்தி இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ இது வேதனையை தருகிறது. இதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தொண்டர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெ.வின் பதவி அடைந்த எந்த அமைச்சரும் சோதனை நடந்த போது அங்கு வரவில்லை. எங்கள் வீடுகள் மற்றும் சசிகலாவின் வீடுகளில் சோதனை நடத்துவது போல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வீடுகளிலும் விரைவில் சோதனை கண்டிப்பாக நடக்கும்” என தெரிவித்தார்.