போயஸ்கார்டனில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - சாட்டையை சுழற்றும் வருமான வரித்துறை
Publish Date: Tue, 21 Nov 2017 (09:48 IST)
Updated Date: Tue, 21 Nov 2017 (11:00 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீட்டில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதையடுத்து, வருமான வரித்துறையினர் மீண்டும் அதிரடியாக களம் இறங்கவுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
சசிகலா குடும்பம் மற்றும் உறவினர் வீடுகள் என 215 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதில் ரூ.1500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், 200க்கும் மேற்பட்ட பினாமி பெயரிகளில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்திலும் வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். அதில், சில பென் டிரைவ், லேப்டாப் மற்றும் ஜெ.விற்கு வந்த கடிதங்கள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றனின் உதவியுடன் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சசிகலா தங்கியிருந்த அறையில் பல போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், திரைமறைவில் நடந்த ஏராளமான முறைகேடுகள், பேரங்கள் பற்றிய தகவல்களும் சிக்கியதாக தெரிகிறது.
மேலும், பணப் பரிவர்த்தனை தொடர்பு உள்ள முக்கிய கடிதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆவணங்களை ஆய்வு செய்த பின் சசிகலா குடும்பத்தினரிடம் மீண்டும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்