Publish Date: Thu, 12 Sep 2019 (20:58 IST)
Updated Date: Thu, 12 Sep 2019 (22:11 IST)
சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் சரிந்து விழுந்ததால் பரிதாபமாக இளம்பெண் பலியான கொடுமையான சம்பவத்தில் லாரி டிரைவரை கைது செய்த போலீஸ், பேனர் வைத்தவரை ஏன் கைது செய்யவில்லை? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பேனர் வைத்தவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் கைது செய்யவில்லையா? சென்னை ஐகோர்ட் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அரசியல் கட்சிகள் மீது நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது தான் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதும் ஒரே ஒரு பேனர் அந்த பெண்ணின் வாழ்க்கையையே முடித்துவிட்டது என்பதும் கொடூரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
அதிமுக நிர்வாகி ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனரால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேனர் கலாச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வரவேண்டும் என்றும், இனியொரு உயிர் பேனரால் பலியாக கூடாது என்றும் சமூக நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். நீதிமன்றம் தானாகவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது