Publish Date: Thu, 19 Jul 2018 (12:24 IST)
Updated Date: Thu, 19 Jul 2018 (12:28 IST)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடி வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருகிறது , கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரஞ்சு குரோவ் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைகண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டுக்குள் கோழியை வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று இரவு குன்னூர் அருகேயுள்ள சந்திரா காலனி கரோலினா பகுதியில் வீட்டின் அருகேயுள்ள பாறை மீது சிறுத்தை ஒன்று இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பாறை மீது அமர்ந்திருந்த சிறுத்தை அருகேயுள்ள புதருக்குள் சென்று விட்டது இரவு நேரம் என்பதால் சிறுத்தையை விரட்டும் பணி நிறுத்தப்பட்டது மீண்டும் நாளை காலையில் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை விரட்டும் பணி தொடர்ந்து நடைப் பெரும் எனவும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.