Publish Date: Thu, 19 Jul 2018 (12:05 IST)
Updated Date: Thu, 19 Jul 2018 (12:07 IST)
பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசமாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வந்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். எனவே, விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பன விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பீர்களா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பழனிச்சாமி “ஆந்திர பிரச்சனைக்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. காவிரி பிரச்சனையின் போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை” என தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்பதை அவர் சூசமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.