கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு விமானம் மீது லேசர் ஒளி வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது சமூக விரோதிகள் செயலா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
புனேவில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தில் 178 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னையில் தரையிறங்கும் போது, பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
உடனடியாக விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில், விமானத்தை பாதுகாப்பாக இறக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் மூன்றாவது சம்பவம் இது என்பதனால், விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன், லேசர் ஒளி உள்பட எந்த ஒளியையும் அடிக்கக்கூடாது என்ற விதியும் உள்ளது.
அதையும் மீறி சமூக விரோத செயல்களை செய்பவர்கள் யார் என்பது போலீசார் விசாரணைகளில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.