Publish Date: Fri, 22 Nov 2019 (12:57 IST)
Updated Date: Fri, 22 Nov 2019 (13:02 IST)
”அதிசயம் நிகழும்” என்ற சினிமா வேண்டுமானால் வரலாம் என ரஜினியை குறித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததிலிருந்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் அடிக்கடி பேசி வரும் “வெற்றிடம் நிலவுகிறது” போன்ற பேச்சுகளால் அதிமுகவினர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் ரஜினிகாந்த், ‘தேவைபட்டால் கமலுடன் இணைந்து செயல்பட தயார்” என கூறினார். மேலும் சமீபத்தில் கமல் 60 நிகழ்ச்சியில் “எடப்பாடி முதல்வராவார் என அவர் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார், இது போன்ற அதிசயம் பிற்காலத்தில் கூட நிகழலாம்” என்பது போல் பேசினார்.
இதனை குறித்து அதிமுகவினர் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தவறான ஒன்று என கூறியுள்ளார். மேலும் “ 2021-ல் “அதிசயம் நிகழும்” என்ற சினிமா வேண்டுமானால் வரலாம்” எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக ரஜினியின் கருத்துக்கு அதிமுக நாளிதழில் ரஜினியை குறிப்பிட்டு ”முதல்வராக ஆசைப்படும் ரீல் ஹீரோக்களுக்கு மத்தியில் எடப்பாடி தான் ரியல் ஹீரோ” என பதிலடி வெளிவந்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.