Publish Date: Sat, 16 Mar 2019 (18:48 IST)
Updated Date: Sat, 16 Mar 2019 (18:50 IST)
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சிக்கி சிறையி உள்ள கைதிகளுக்கு எதிராக சிறையில் உள்ள மற்ற கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர் பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு இப்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். இவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் கோவை சிறையில் உள்ள மற்ற கைதிகள் இவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவர்கள் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தவர்களை அடைக்கும் இடத்தில் அடைக்கவேண்டும் எனக் கூறி கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் சிறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கோவை சிறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.