Publish Date: Thu, 12 Nov 2020 (10:05 IST)
Updated Date: Thu, 12 Nov 2020 (10:06 IST)
திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு திமுக ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அமைச்சர் துரைக்கண்ணு இறப்பு குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்டதாக எங்கள் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்.
அமைச்சரின் மரணத்தில் அதற்கான சிகிச்சையில் சந்தேகத்தை எங்கள் தலைவர் எழுப்பவில்லை. அவர் மறைந்த பிறகு உடலை வைத்துக் கொண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட ரூ.800 கோடியை மீட்க நடந்த பேரம் - நடத்தப்பட்ட போலீஸ் வேட்டை குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கேள்விகள் எழுப்பியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் நாளை தமிழகத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வருவார். வந்ததும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற 800 கோடி ரூபாய் மீட்பு குறித்த போலீஸ் வேட்டை மட்டும் அல்ல ஜெயலலிதா மரணத்தில் நிகழ்ந்துள்ள மர்மங்கள், சதிகள், முதல் குற்றவாளி யார் என்று கொடுத்துக் கொண்ட பேட்டிகள் அனைத்தையும் விசாரிப்பார். குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.