Publish Date: Mon, 12 Oct 2020 (11:41 IST)
Updated Date: Mon, 12 Oct 2020 (11:43 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியிலிருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ள நிலையில் தான் விலகியதற்கான காரணங்களை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து வந்த நடிகை குஷ்பூவிற்கும், காங்கிரஸ் கமிட்டியினருக்கும் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தையும் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து தான் ஏன் காங்கிரஸிலிருந்து விலகுகிறார் என விளக்கம் அளித்துள்ள அவர் “பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸில் இணையவில்லை. கட்சியில் உயர் பதவியில் இருப்பவர்களும், மக்களால் அங்கீகரிக்கப்படாத சிலரும் என்னை அடக்கி ஒடுக்க முயன்றார்கள். நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரஸில் எனக்கு வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், மற்றவர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.