Publish Date: Wed, 25 Apr 2018 (15:11 IST)
Updated Date: Wed, 25 Apr 2018 (16:20 IST)
சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துகள் நெட்டிசன்கள் விவாதிக்கும் விவகாரமாக மாறியிருக்கிறது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க கோரி விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. இதனால், வேளச்சேரி, அடையாறு, சைதாப்பேட்டை வழியாக வந்த வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 2 நிமிடத்தில் செல்பவர்கள் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நிலையில், நடிகை கஸ்தூரி வேளச்சேரியில் சிக்கிக்கொண்டார். எனவே தனது டிவிட்டர் பக்கத்தில் “விடுதலை சிறுத்தை கட்சி போராட்டத்தால் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு அடி நகர்கிறது. பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகிவிட்டது ஏன் என தெரியவில்லை” என ஒரு காட்டமான டிவிட் போட்டிருந்தார்.
அதை சிலர் ஆமதித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களுக்காகவே அவர்கள் போராடுகிறார்கள். பல வருடங்கள் காத்திருந்து சுதந்திரம் பெற்ற நாம், 2 மணி நேரம் பொறுத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினர்.
ஆனால், காரிலிருந்து இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி விட்டதாகவும், தனக்கு பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் காத்திருப்பதாகவும் அவர் கோபமாக தெரிவித்தார். இப்படி பலர் கேள்வி எழுப்ப, கஸ்தூரி அதற்கு எதிராக பதிலளிக்க அவரின் டிவிட்டர் பக்கம் பரபரப்பாகியது.
தற்போதுவரை, கஸ்தூரி இதுபோல் டிவிட் போட்டது தவறு எனவே பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.