Publish Date: Wed, 10 Apr 2019 (08:15 IST)
Updated Date: Wed, 10 Apr 2019 (08:18 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அவர் அதிகாலை முதல் இரவு வரை ஓய்வின்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனனை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசி கொண்டிருந்தார். அப்போது மேடையில் உட்கார்ந்திருந்த வேட்பாளர் வசந்தகுமார் ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் அவரை எழுப்பிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகள் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போதே தூங்கிய வசந்தகுமாரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.