Publish Date: Mon, 08 Apr 2019 (11:14 IST)
Updated Date: Mon, 08 Apr 2019 (11:17 IST)
அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியில் கடந்த 1988ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த சிலை துணியால் சுற்றி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்களால் சிலையின் தலைப்பகுதி துண்டாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்து, சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை உடைப்புக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சிலை உடைக்கப்பட்டது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில்’ தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள் அமைதியை குலைக்கும் இழிவான செயலில் ஈடுபடுகின்றனர். வன்முறையை ஏற்படுத்தும் தீய எண்ணத்தில் செயல்படும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.