நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே பல முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது காளியம்மாள் விலகியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த காளியம்மாள் திடீரென அந்த பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள "உறவுகள் சங்கமம்" நிகழ்வில் காளியம்மாள் பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்வுக்கான போஸ்டரில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், அந்த போஸ்டரில் அவர் "சமூக செயற்பாட்டாளர்" என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நாம் தமிழர் கட்சியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் பொறுப்பிலிருந்து முழுமையாக அவர் விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே சீமானுக்கும் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் அவர் வேறொரு கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.