Publish Date: Tue, 24 Nov 2020 (13:21 IST)
Updated Date: Tue, 24 Nov 2020 (13:23 IST)
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது குறித்து திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களால் எப்படி கல்வி கட்டணம் செலுத்தி பயில முடியும் என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மாணவர்களின் மருத்துவ செலவை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேட்கப்பட்டபோது பதிலளித்த திமுக பொது செயலாளர் துரைமுருகன் “ஆண்டுக்கு 40 ஆயிரம் கூட கட்ட முடியாதவர்கள் எதற்காக டாக்டருக்கு படிக்க வேண்டும்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துரைமுருகன் பேச்சு குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”திமுகவில் மூத்தவரான துரைமுருகனால் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முடியாது. அதனால் அவருக்கு கட்சியின் மீது வெறுப்பு உள்ளது. அந்த விரக்தியின் காரணமாகவே திமுக தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் மருத்துவ மாணவர்களை திட்டிவிட்டார்.” என்று கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.