Publish Date: Tue, 30 Jul 2019 (13:21 IST)
Updated Date: Tue, 30 Jul 2019 (13:22 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா மன உளைச்சலில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக முக்கிய தலைகள் தலைதூக்கி செய்த அராஜகங்கள் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது. அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ தீபா தெரிவித்தார். ஆனால் அங்கும் அவருக்குப் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லை.
இந்நிலையில் பேரவையினரிடம் அவருக்கு பெரிதாக வரவேற்பு இல்லாத காரணத்தால் இன்று காலை தனது முகநூலில்’ எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன்’ எனக் கூறினார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அதை நீக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.