டாக்டர் சிவகுமார் வீட்டில் சோதனை: ஜெ. மரணம் குறித்த தகவல் வெளிவருமா?
டாக்டர் சிவகுமார் வீட்டில் சோதனை: ஜெ. மரணம் குறித்த தகவல் வெளிவருமா?
Publish Date: Thu, 09 Nov 2017 (13:28 IST)
Updated Date: Thu, 09 Nov 2017 (13:33 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்று வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் அவரது மரணம் குறித்து சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே உண்மை நிலவரம் குறித்து தெரியும் என பேசப்படுகிறது.
அப்பல்லோவில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட தொடக்கத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் ஒருவர். இவர் ஜெயலலிதாவின் சிகிச்சைகளை மேற்பார்வை செய்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தவறான சிகிச்சை காரணமாகத்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என ஜெயலலிதாவுக்கு முன்பு சிகிச்சையளித்த பிரபல டாக்டர் ஷங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் டாக்டர் சிவகுமார் வீடும் தப்பவில்லை.
இந்த வருமான வரித்துறையினரின் சோதனையின் போது மருத்துவர் சிவகுமார் வீட்டில் இருந்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவலோ அல்லது அவரது மரணம் குறித்தான ஏதேனும் ரகசியமான தகவலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.