Publish Date: Thu, 09 Nov 2017 (12:10 IST)
Updated Date: Thu, 09 Nov 2017 (12:16 IST)
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், ஓய்வெடுக்க தனது பிரதமர் அலுவலகத்திற்கு நீங்கள் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த மோடி அதன் பின் டெல்லி கிளம்பி சென்றார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என திமுக மற்றும் பாஜகவினர் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால், இதில் அரசியல் இல்லாமல் இல்லை என சில பாஜகவினரே கூறினர். மேலும், மோடிக்கு நன்றி தெரிவித்து மு.க.அழகிரி ஒரு கடிதமும் அனுப்பினார். இவை அனைத்தும், இது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் கலந்து கொள்ளும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், மோடியின் வருகைக்கு பின் இரு கட்சிகளும் தனித்தனியே போரட்டம் நடத்தின. திமுக நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ளவில்லை.
மேலும், சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் ‘கருணாநிதி கடந்த 3 வருடங்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்கிறார். அப்போதெல்லாம் சென்னை வந்த மோடி ஏன் கருணாநிதியை சந்திக்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவங்கள் மூலம் திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.