சாதிய சூழல் குறித்து கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட கோபி - சுதாகர் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமானிடம் பத்திரிக்கையாளர்கள், சமீபத்தில் நடந்த ஆணவப்படுகொலை குறித்து கோபி - சுதாகர் யூட்யூப் வீடியோ வெளியிட்டதற்கு அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் “அவர்கள் சரியாகதானே கேட்டிருக்கிறார்கள். தமிழன் என்பவன் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாதவன். தமிழனுக்கு சாதியில்லை. இங்கு உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலர் மது அருந்துகின்றனர், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், பெண்களின் நகைகளை பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வளவு குற்றங்களையும் செய்துவிட்டு தாங்கள் உயர்ந்த சாதியினர் என்று கூறிக்கொள்ள முடியுமா?
அதுவே அண்ணல் அம்பேத்கர் என்ன செய்தார். அவரை கீழ்சாதி என்று இவர்கள் தூற்றினார்கள். இந்த மொத்த நாட்டிலும் அதிகம் படித்த பேரறிஞர் அவர்தான்.
சாதிக்காக கொல்லப் பார்க்காதீர்கள். சாதியை கொல்லுங்கள். இப்போது இந்த சம்பவத்தை விமர்சித்த அவர்களை (கோபி, சுதாகர்) கூட மிரட்டதான் முயற்சிக்கிறார்கள். இதில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K