Publish Date: Sat, 13 Apr 2024 (16:25 IST)
Updated Date: Sat, 13 Apr 2024 (16:28 IST)
பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என்றும் சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பு, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது என்றும் ஒழித்துக் கட்ட வேண்டும், அப்படித் தான் இந்த சனாதனம் என்று உதயநிதி கூறியிருந்தார்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றும் சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்றும் அவர் பேசியிருந்தார். இந்நிலையில் சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை என்றார்.
நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது என்று அவர் தெரிவித்தார். பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என்றும் சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.