வீட்டு வேலை செய்பவர்களுக்கு தமிழக அரசின் புதிய உத்தரவு
Publish Date: Wed, 06 May 2020 (07:51 IST)
Updated Date: Wed, 06 May 2020 (08:08 IST)
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்த ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசு ஒரு சில தளர்வுகளை பொதுமக்களுக்கு அறிவித்தது என்பது தெரிந்ததே.
அவ்வாறு அறிவிக்கப்பட்டதில் ஒன்று வீட்டுவேலை செய்பவர்கள் வீடுகளுக்கு வேலைக்கு செல்லலாம் என்பது தான். ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்த தளர்வில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவினை 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்ததன் அடிப்படையில்
03.05.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் வீட்டு வேலை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி புரிய அனுமதிக்கப்பட்டு இருந்தது
தற்போது, பொதுநலன் கருதி 04.05.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணி புரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணி புரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்