Publish Date: Wed, 08 Jan 2025 (16:36 IST)
Updated Date: Wed, 08 Jan 2025 (16:38 IST)
வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் கனமழை குறித்து அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி தஞ்சை உள்பட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம், இரவு வேளையில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனிமூட்டம் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.