இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென் மாவட்டங்கள் உட்பட பல கடலோர பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை தொடரும். மேலும், நவம்பர் 22-ல் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.